கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ், பெருமாள் கோயில் வீதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று வழங்கப்பட்ட அரிசியின் தரத்தை ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. உடன், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர். 
தமிழகம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.2,000; நாளை முதல் டோக்கன் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

க.சக்திவேல்

இரண்டாம் தவணையாக ரேஷன் கடைகள் மூலம் ரூ.2,000 நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் பெறுவதற்கு நாளை (மே 11) முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் முத்துராமலிங்கம் வீதி, பாரதி நகர், பெருமாள் கோயில் வீதி, பூ மார்க்கெட் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று (ஜூன் 10) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், பொருட்கள் வாங்க வரும் முதியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்யேக வரிசை ஏற்படுத்தித் தர அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர், அமைச்சர் சக்கரபாணி கூறும்போது, "அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க 11-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக டோக்கன்கள் வழங்கப்படும்.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் வரும் 15-ம் தேதி முதல் இரண்டாம் தவணையாக ரூ.2,000 மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்" என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT