வெளிமாநிலங்களில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள எரி சாராயத்தை கடத்தி வந்து, வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து விற்பனை செய்து வந்த சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி அருகே கிராமப்பகுதியான ஆண்டியார்ப்பாளை யத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (44). தையல் தொழில் செய்து வரும் இவர், கரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்ததை பயன்படுத்தி, கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மேற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீஸார் மதகடிப்பட்டில் உள்ள ஆறுமுகத்தின் மாமனார் பழனி என்பவர் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.
இந்தத் சோதனையில் பழனியின் வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டியும், அங்கிருந்த சொகுசு கார் ஒன்றிலும் எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 119 கேன்களில் இருந்த 4,165 லிட்டர் எரி சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அங்கிருந்த ஒரு கார், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
வட்டாட்சியர் மணிகண்டன், கிராம நிர்வாக அதிகாரிகள் அமிர்தலிங்கம், இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த டெய்லர் ஆறுமுகம் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
‘‘சாராய கடத்தலில் ஈடுபட்ட ஆறுமுகம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து எரி சாராயத்தை மொத்தமாக கடத்தி வந்து, தனது வீட்டில் வைக்காமல், வயதான தனது மாமனார் வீட்டில் பதுக்கி வைத்து, கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்’’ என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயம், கார், பைக் ஆகியவற்றை போலீஸார் கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.