கிராம மேம்பாட்டு ஆய்வறிக்கை தயாரித்த பத்தாம் வகுப்பு மாணவியை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டினர்.
அந்த ஆய்வறிக்கை விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த லட்சுமணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது மகள் கௌரி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சிறு வயதில் இருந்தே கிராம வளர்ச்சி குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். ஒவ்வொரு கிராமத்தின் பாரம்பரியும், கிராமங்களின் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.
குறிப்பாக எங்கள் கிராமத்தின் தெருக்கள், அதன் பாரம்பரியும், குடிநீர் தேவைக்காக மக்கள் ஏரி, குளம் அமைத்தது குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் கிராம புள்ளி விவர பதிவை உருவாக்கியுள்ளார்.
இதுபோல் ஒவ்வொரு கிராம ஊராட்சி மற்றும் வார்டுகள் வாரியாக புள்ளிவிவர பதிவை உருவாக்கவும், மாவட்ட ஆட்சியர் போல் கிராம ஆட்சியர் பதவியை உருவாக்கவும், என் மகள் தயாரித்த தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வறிக்கையை 5 மற்றும் 8-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக சேர்க்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மாணவி கெளரி காணொலி காட்சி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜராகி தனது ஆய்வு குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது நீதிபதிகள், அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்ததற்காக மாணவியை நீதிபதிகள் பாராட்டினர்.
பின்னர் மாணவியின் ஆய்வறிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 16-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.