மணிகண்டன்: கோப்புப்படம் 
தமிழகம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி வழக்கு; காவல்துறை எதிர்ப்பு: தீர்ப்பைத் தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்

ஆர்.பாலசரவணக்குமார்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறித் தன்னை ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என, நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூன் 9ஆம் தேதி வரை மணிகண்டனைக் கைது செய்யக் கூடாது என, இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

முன்னாள் அமைச்சரின் முன்ஜாமீன் மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று (ஜூன் 09) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மணிகண்டன் தரப்பில், "மணிகண்டன் 12 ஆண்டுகள் அரசு மருத்துவராகப் பணியாற்றி, பின் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை திருமணமானவர் எனத் தெரிந்துதான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளார். நடிகையைக் காயப்படுத்தியதாகக் கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. நடிகையைத் தெரியும். புகைப்படங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். சாந்தினி, மணிகண்டனுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். இடைக்காலப் பாதுகாப்பாக முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. கரு உருவாகும் முன் எப்படிக் கருக்கலைப்பு செய்ய முடியும்?

மணிகண்டன் சாந்தினியை உதைத்ததாக புகாரிலும் கூறப்படவில்லை. கருவுக்கு யார் காரணம் எனக் கண்டுபிடிக்க வேண்டும். விசாரிக்கட்டும். மணிகண்டன் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யட்டும். திருமணமாகாதவன் என்று அவரிடம் கூறவில்லை. அது அவருக்கும் தெரியும். அதனால் அவரை நம்பவைத்து ஏமாற்றியதாகக் கூற முடியாது. எந்த மிரட்டலும் விடுக்கவில்லை.

ஏப்ரல் 15 வரை மணிகண்டனுடன் வசித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், "2017-ல் பரணி என்பவர் மூலம் மணிகண்டனுக்கு நடிகை சாந்தினி அறிமுகம் ஆகியுள்ளார். நடிகை சாந்தினி, மலேசியாவின் தென் மாநிலத் தூதராக உள்ளார். மலேசியாவில் முதலீடு தொடர்பாக சந்தித்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு செய்துள்ளார். உதைத்ததால் படுகாயமடைந்துள்ளார்.

விசாரணை ஆரம்பநிலையில் உள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது. முக்கியப் பதவியை வகித்ததால் சாட்சிகளைக் கலைக்கக்கூடும்" என வாதிடப்பட்டது.

சாந்தினி தரப்பில், "திருமணம் செய்து கொள்வதாகத் தோற்றத்தை ஏற்படுத்தியதால், உறவுக்கு சாந்தினி ஒப்புதல் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாகக் கருத வேண்டாம் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலில் சாந்தினி யார் எனத் தெரியாது எனக் கூறியவர், பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்" என வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT