புதுச்சேரியில் புதிதாக 545 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை புதுச்சேரியில் கரோனா மொத்த பாதிப்பு 1 லட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 8) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,092 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 400, காரைக்கால் – 112, ஏனாம் – 24, மாஹே – 9 என மொத்தம் 545 (5.99 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பிள்ளையார்குப்பம் மண்ணாடிப்பட்டு ரோட்டைச் சேர்ந்த 85 வயது முதியவர், கல்மண்டபத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர், ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர், வெங்கட்டா நகரைச் சேர்ந்த 81 வயது முதியவர், வினோபா நகரைச் சேர்ந்த 73 வயது முதியவர், முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த 56 வயது ஆண் எனப் புதுச்சேரியில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 106 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,115 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,032 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 7,147 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 938 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 1,315 (92.02 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரத்து 783 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 670 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 685 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.