கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என எம்ஜிஆர் காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலினுக்கு விசிக எம்.பி., ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்.பி. எழுதியுள்ள கடிதம்:
“தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைச் சேர்த்து தமிழக அரசு 1986ஆம் ஆண்டு ஆணையிட்டுள்ளது.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அன்றைய திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தின்போது கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்று இருந்தனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கலப்புத் திருமணம் செய்துகொண்ட எவரும் ஆசிரியர் பணியில் நியமனம் செய்யப்படவில்லை.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூக அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணை வழங்குமாறு வேண்டுகிறேன்”.
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள் வைத்துள்ளார்.