மக்கள் நலன் சார்ந்து, நீண்டகால வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு கொள்கைகள் வகுக்கப்படும் என்று மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
மாநில திட்டக்குழு கடந்த 2020-ம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மாற்றப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த குழு கடந்த 6-ம் தேதி திருத்தி அமைக்கப்பட்டது.
அதன்படி, துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், முழுநேர உறுப்பினராக ராம.சீனுவாசன், பகுதி நேர உறுப்பினர்களாக டிஆர்பி ராஜா எம்எல்ஏ, மருத்துவர் அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இக்குழுவின் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் மற்றும் டிஆர்பி ராஜா உள்ளிட்ட உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். பின்னர், ஜெயரஞ்சன் கூறியதாவது:
முதல்வரின் ஆலோசனைகளைப் பெற்று, எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து பார்க்க வேண்டும். பிறகு அரசின் கொள்கைகளை ஆய்வுசெய்ய வேண்டும். தற்போதைய சூழலில்,மக்கள் நலன் சார்ந்தவளர்ச்சியே முக்கியம். நடுவில் சில வழுவல்கள் இருந்தன. அவற்றைசீரமைத்து, நீண்டகால வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். அதற்கானபணிகளை மேற்கொள்வோம். அனைத்து உறுப்பினர்களும் வந்த பிறகு,குழுவின் முதல் கூட்டம்குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.