புதுச்சேரியில் புதிதாக 613 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 5) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,086 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 470 பேரும், காரைக்காலில் 106 பேரும், ஏனாமில் 21 பேரும், மாஹேவில் 16 பேரும் என மொத்தம் 613 (6.75 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 7 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 2 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். மாஹேவில் புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இவர்களில் 10 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,613 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 ஆகவும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 439 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,325 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 7 ஆயிரத்து 458 பேரும் என 8 ஆயிரத்து 783 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக 1,312 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 98 ஆயிரத்து 43 (90.41 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 10 லட்சத்து 94 ஆயிரத்து 751 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 264 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 304 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.