தமிழகம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்த வேண்டும்: சமம் குடிமக்கள் இயக்கம் வேண்டுகோள்

கி.மகாராஜன்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும் என தமிழக சமம் குடிமக்கள் இயக்கம் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இயக்கத்தின் தலைவர் சி.சே.ராஜன், கூறியதாவது:

கரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஆனால் நீட் உள்ளிட்ட பிற நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்து அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை எந்த முறையில் நடைபெறும் என ஆலோசிக்காமலேயே சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஊரடங்கின் போதும் நீட் தேர்வு நடத்திய நிலையில், பிளஸ் 2 தேர்வை நடத்தி முடிக்க முடியும்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தொற்று குறைந்து வருகிறது. இதனால் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேவையான கால இடைவெளி விட்டு, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி, தேர்வு நேரத்தை குறைத்து, விரிவான விடையளிக்கும் முறைக்குப் பதிலாக கொள்குறி வகையில் தேர்வை நடத்தி முடிக்கலாம்.

இந்த பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் உயர் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். பிளஸ் 2 தேர்வை நடத்துவதே மாணவர்களின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்கும். எனவே தமிழகத்தில் கண்டிப்பாக பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT