கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்துள்ளதைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
’’கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கான கிசிச்சைக் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. அரசு அறிவித்துள்ள தொகையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாகப் பெறப்படும் புகார்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகத்தின் கரோனா கட்டுப்பாடு மையத்தை 0422-1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். மேலும், covidcomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 94884 40322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.
புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.