சேலம் இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். உடன் ஆட்சியர் கார்மேகம், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர். 
தமிழகம்

சேலத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக அறிவித்த இரு தனியார் ஆய்வகங்களுக்கு ‘சீல்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

செய்திப்பிரிவு

சேலத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை உண்மைக்கு மாறாக அறிவித்த இரு தனியார் ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலை வளாக கரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளை கூடுதலாக அமைக்கும் பணிகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் இரும்பாலை வளாக கரோனா சிகிச்சை மையத்தில் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கும் பணி 5 நாட்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் அரசு ஆய்வகத்தில் தினமும் சராசரியாக 5,200 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் மருத்துவ ஆய்வகங்களில் 1,600 மாதிரிகள் வரை பரிசோதிக்கப்படுகின்றன.

அரசு ஆய்வக பரிசோதனை முடிவுகளில் சராசரியாக 11 முதல் 12 சதவீதம் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. தனியார் ஆய்வகங்களின் முடிவுகளில் 51 சதவீதம் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

எனவே, அதிக பாசிடிவ் வந்த இரு ஆய்வகங்களின் அறிவிக்கப்பட்ட மாதிரிகளை, அரசு ஆய்வகத்தில் பரிசோதித்தபோது அவை நெகடிவ் என்று வந்தது. இதையடுத்து, சேலம் 5 ரோடு மற்றும் அஸ்தம்பட்டி அருகே செயல்படும் தனியார் மருத்துவமனை ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தவறு செய்யும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்கவில்லை என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தில், 270 படுக்கைகள் காலியாக உள்ளன. குறுகிய காலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்யமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

மின்சாரம் கொள்முதல்...

தமிழகத்தில் தேர்தலுக்காக 6 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகளை செய்யாமல் விட்டனர். அதனால், பல இடங்களில் மின் பாதைகள் மீது மரக்கிளைகள் படர்ந்து மின் தடை ஏற்படுகிறது அதனை தவிர்க்க பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வரின் உத்தரவுக்கிணங்க ஊரடங்கு காலம் முடியும் வரை, 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். இரவு நேரத்திலும் மின் தடை ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மேற்கொண்டு வரும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா உயரழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நிறைவடைந்தது.

“கடந்த ஆட்சியின்போது, கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதா?” என செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பதில் கூறும்போது, “சட்டப்பேரவையில் உரிய பதில் அளிக்கப்படும்’ என்றார்.

ஆய்வின்போது, சேலம் ஆட்சியர் கார்மேகம், எம்பி-க்கள் பார்த்திபன், சின்ராஜ், எம்எல்ஏ ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT