புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ. 
தமிழகம்

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை செயல்படுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரிக்கை

கே.சுரேஷ்

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை செயல்படுத்த வேண்டும் என, தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தை இன்று (ஜூன் 03) ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவது நமக்கு நிம்மதியைக் கொடுத்தாலும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனால், பாதிக்கப்படுவோருக்கு அனைத்துவித மருந்துகளையும் தயார் நிலையில் வைத்திருந்து இறப்புகளைத் தடுக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பம்.

அதிமுக ஆட்சியில் இம்மையத்தை ஆய்வு செய்து, செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். எனவே, இம்மையத்தை திறப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சை, பராமரிப்பு, உணவு, குடிநீர் போன்ற வசதிகள் குறைவாக உள்ளது, எனவே, மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி இவற்றை சரிசெய்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT