கோப்புப்படம் 
தமிழகம்

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணியில் உடன்பாடு; சபாநாயகர், அமைச்சர்களை பாஜக கட்சித் தலைமை அறிவிக்கும்: எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு மாநிலத் தலைவர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே அமைச்சரவை, சபாநாயகர் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஒரு மாதத் துக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்துக்கு பாஜகசட்டப்பேரவை கட்சித்தலைவர் நமச்சி வாயம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர், நியமன எம்எல்ஏக்கள் 3 பேர்மற்றும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித் துள்ள சுயேச்சை எம்எல்ஏக்கள் மூவரில் இருவரும் பங்கேற்றனர். ஏனாம் சுயேச்சை எம்எல்ஏ ஊரில் இல்லாததால் பங்கேற்கவில்லை.

கூட்டத்துக்குப் பின் மாநிலத்தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சர்கள்,சபாநாயகர் பதவிக்கான பங்கீடு முடிந்தது. பாஜகவிற்கு சபாநாயகர் பதவியுடன் அமைச்சர்கள் பதவியை தர உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவி பாஜகவுக்கு எத்தனை என்பதும், பாஜகவில் யாருக்கு என்ன பதவி என்பது பற்றியும் கட்சி தலைமை தெரிவிக்கும். அனைத்து பேச்சுவார்த்தையும் சமூகமாக முடிவடைந்துள்ளது. பாஜகவில் அமைச்சர்கள், சபாநாயகர் யார் என்ற விவரங்களையும் கட்சி மேலிடத்தில் வெளியிடுவார்கள்.

5 ஆண்டுகள் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கும். மத்திய அரசு திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி மாநிலம் வளர்ச்சி அடையும். தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பமில்லை. திமுக-காங்கிரஸ் குழப் பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது.

புதுச்சேரியில் நிதி தட்டுப்பாடு வராது. மத்திய அரசிடம் கேட்டு பாஜக பெறும். அனைத்து திட்டங்களும் நிறை வேற்றுவோம்." என்று தெரிவித்தார். “மாநில அந்தஸ்து கேட்டு பெறுவீர்களா?” என்று கேட்டதற்கு, "திட்டங்களையும், நிதி யையும் பற்றி குறிப்பிடுகிறேன்" என்றார்.

பாஜக சட்டமன்ற தலைவர் நமச்சி வாயம் கூறுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் சபாநாயகர்,அமைச்சர்கள் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கட்சி மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரி வந்து முதல்வரை சந்தித்து அறிவிப்பை வெளியிடுவார்கள். அகில இந்திய தலைமைதான், துணை முதல்வர் மற்றும் பிற பதவிகள் குறித்து அறிவிப்பார்கள். கட்சித் தலைமையின் எந்த முடிவையும் ஏற்பதாக ஒப்புதல் தருவதாக கையெழுத்திட்டுள்ளோம். நாங்களும் ஆளும்கட்சியில் ஓர் அங்கம்தான். என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுதான் முதல்வர் பொறுப்பு ஏற்றார். நாங்கள் பொறுப்புகளை பங்கீட்டு கொள்கிறோம்." என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT