அமைச்சர் செந்தில்பாலாஜி: கோப்புப்படம் 
தமிழகம்

மின்சார வாரிய பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா காரணமாக தமிழ்நாடு மின்சார வாரிய பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 02) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் /தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்புப் பணிகளுக்காகக் கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2020 முதல் ஆறு மாத காலமாக எந்தவித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்புப் பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்புப் பணிகள் எவ்விதத் தொய்வுமின்றி விரைந்து எடுத்துக்கொள்ளப்படும் என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT