திருச்சி மாவட்டத்தில் இதுவரை 16 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படும் விகிதமும் 12 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஜன. 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி இடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் அரசு நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என, மொத்தம் 84 இடங்களில் தடுப்பூசி இடப்படுகிறது.
மருத்துவத் துறையினர், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு அதிகமானோர் ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி இடப்பட்டு வருகிறது. இதன்படி, நேற்று (ஜூன் 01) வரை திருச்சி மாவட்டத்தில் 16 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி இடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியதாவது:
"திருச்சி மாவட்டத்துக்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடுவதற்காக நேற்று வரை கோவிஷீல்ட் 2,77,800 டோஸ், கோவேக்சின் 30,800 டோஸ் வந்துள்ளன.
இதேபோல், 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு இடுவதற்காக கோவிஷீல்ட் 44,500 டோஸ், கோவேக்சின் 7,700 டோஸ் வந்துள்ளன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 3,35,509 பேருக்கு கரோனா தடுப்பூசி இடப்பட்டுள்ளது. இது, திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசி இடுவதற்கு தகுதியானர்களில் 16 சதவீதம் ஆகும். மருத்துவத் துறையினர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள், 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.
18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி இடும் பணி கடந்த மே 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தடுப்பூசி இல்லாததால் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இதனால், தடுப்பூசி இடுவதற்காகச் சென்ற பலரும் ஏமாற்றம் அடைந்தனர். தடுப்பூசி வந்தவுடன் இவர்களுக்கு இடப்படும்.
18,000 டோஸ் வந்தன
திருச்சி மாவட்டத்தில் நேற்று 3,500 டோஸ் தடுப்பூசிகளே கையிருப்பில் இருந்ததால், இன்று தடுப்பூசி முகாம் நடைபெறுமா என்று உறுதியாகக் கூற முடியவில்லை. இந்தநிலையில், இன்று (ஜூன் 02) காலை திருச்சி மாவட்டத்துக்கு கோவிஷீல்ட் 15,000 டோஸ், கோவேக்சின் 3,000 டோஸ் வந்தன. அவை உடனடியாக அந்தந்த தடுப்பூசி இடும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி இடும் பணி வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் கரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படும் விகிதம் தொடக்கத்தில் 12 சதவீதமாக இருந்தது. தொடர் அறிவுறுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றால் தற்போது 2 சதவீதமாகக் குறைந்துள்ளது" என்றனர்.