முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தேவையின்றி சாலையில் சுற்றித் திரிபவர்களின் இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்துள்ளனர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறிய 1 லட்சம் வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் கண்காணிப்பு மேலும் தீவிரமாகிறது

செய்திப்பிரிவு

ஊரடங்கை மீறியதாக கடந்த 7 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் போன்றவற்றுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும்7-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். முன்களப் பணியாளர்கள், அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த 25, 26-ம் தேதிகளில் சாலைகளில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. அதன் பின்னர் பெரும்பாலான சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இதனால், அனுமதியின்றி வரும்வாகனங்களை பறிமுதல் செய்துவழக்கு பதிவு செய்யும் பணியிலும்காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவசர தேவைகளுக்காக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், இ-பதிவு செய்த வாகன ஓட்டிகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம்வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப, ரூ.600 முதல் ரூ.2 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்றங்கள் மூலமாகவே திரும்ப பெற முடியும்.

தமிழகத்தில் கடந்த 52 நாட்களில் மட்டும் முகக் கவசம் அணியாதவர்கள் மீது 12 லட்சத்து 9,584வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 60 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலீஸாருக்கு பாதிப்பு

போலீஸாருக்கு ஏற்படும் கரோனா பாதிப்புகள் குறித்து, அதிகாரிகள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், போலீஸாருக்கு சிகிச்சை, மருத்துவ உதவிகள், அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போடுவது போன்றவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT