சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (29). இவர் தனது மனைவியுடன் புழல் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பணியாளர்கள் தடுப்பூசி காலியாகிவிட்டதாக கூறி இரண்டு நாட்களுக்கு பிறகு வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து இருவரும் வீடு திரும்ப இருந்த நிலையில், அங்கு தற்காலிக காவலராக பணியாற்றிய கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த தினகரன் (42) என்பவர் ரூ.500 கொடுத்தால் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்காலிக கம்பவுண்டராக பணியாற்றிய புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசாந்த் (18) என்பவரிடம் நந்தகோபால் ரூ.300 கையில் கொடுத்துள்ளார். மீதி 200 ரூபாயை கூகுள்பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து தடுப்பூசி போட இருவரையும் மருத்துவரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் நந்தகோபால் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து மருத்துவமனை ஊழியர்கள் தினகரன், பிரசாந்த் இருவரையும் கைது செய்தனர்.