வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக படுக்கை வசதிகள் தொடர்பான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி. 
தமிழகம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கைகள் தயார் மூன்று அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்

வ.செந்தில்குமார்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளல் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கை வசதிகளை வரும் வெள்ளிக்கிழமையன்று மூன்று அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

இதற்காக தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தற்காலிக கூடாரங்கள் மற்றும் கட்டிடங்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஃபேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக சிகிச்சை மையம் அமைக்க உள்ளனர்.

இரண்டு தற்காலிக கூடாரங்கள் மற்றும் தற்காலிக கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டு வரும் இந்தப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இன்று (ஜூன் 1) மாலை ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், அரசு மருத்துவக் கல்லூரி டீன் செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா, மாவட்ட மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1,000 படுக்கைகள் வசதிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

இதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணி, கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்த தற்காலிக சிகிச்சை மையங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இருக்காது’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT