தமிழகம்

புதுச்சேரியில் 4-வது நாளாக ஆயிரத்துக்குக் கீழ் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு: மேலும் 14 பேர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலத்தில் 4-வது நாளாகத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் கீழ் ஒரு நாள் பாதிப்பு குறைந்துள்ளது. மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 1) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,540 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 746, காரைக்கால் -170, ஏனாம் - 29, மாஹே - 34 என மொத்தம் 979 (11.46 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 10 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என 14 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,550 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 432 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,533 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 9 ஆயிரத்து 176 பேரும் என மொத்தமாக 10 ஆயிரத்து 709 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 1,403 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்து 173 (88.37 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 10 லட்சத்து 58 ஆயிரத்து 568 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 15 ஆயிரத்து 453 பரிசோதனைகளில் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 503 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT