தமிழகம்

ஊரடங்கு, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: தூத்துக்குடி அனல்மின் நிலைய 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

ரெ.ஜாய்சன்

கரோனா ஊரடங்கு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் காரணமாக மின்சார தேவை அதிகரித்தது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் முழுமையாக மின் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. இதனால் மின்சார தேவை குறைந்துள்ளது. அதேநேரத்தில்

கடந்த சில நாட்களாக காற்று நன்றாக வீசுவதால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின்சார உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தியது.

அதன்பேரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 1, 2, 3 மற்றும் 4 ஆகிய 4 அலகுகளிலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 5-வது அலகு மட்டும் தற்போது இயங்கி வருகிறது.

மின் தேவை குறைவு காரணமாகவே 4 அலகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின் தேவை அதிகரிக்கும் போது அரசின் அறிவுரை படி இந்த அலகுகள் மீண்டும் இயக்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT