கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் வாரிசுகளுக்கான இழப்பீட்டை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்
பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் அரசால்அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கரோனா தொற்றால் இறக்கநேரிட்டால் அவர்கள் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சம்இழப்பீட்டை, உயர்த்தி வழங்கக்கோரி அளிக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசின் கவனமான பரிசீலனைக்குப்பின் முதல்வர் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, பத்திரிகை, ஊடகத் துறையில் பணியாற்றும் அரசு அங்கீகரித்த செய்தியாளர்கள் அதாவது அரசு அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, மாவட்டஆட்சியரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் கரோனா தொற்றால் இறக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் பொது நிவாரண நிதியில்இருந்து வழங்க உத்தரவிடப்படுகிறது.
மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்த செய்தியாளர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டைப் பெற அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக மாவட்ட ஆட்சியரின் விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.