கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசு மருத்துவமனையின் பிணவறையிலிருந்து அனுப்புவதற்கு லஞ்சம் பெறுவது கண்டறியப்பட்டால், தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான ஏராளமானோர், திருப்பூர்மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சைக்காக வருகிறார்கள். இவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இறந்தவர்களின் சடலங்களை பிணவறையில் வைத்து, அங்கிருந்து மின் மயானத்துக்கு அனுப்புவதற்கு ரூ.6 ஆயிரம் வரை சிலர் லஞ்சம் கேட்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.
திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (83). இவர், கரோனா தொற்று சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மாதம் 24-ம் தேதி உயிரிழந்தார்.
இதே நாளில், தொற்றால் பாலமாணிக்கம் (63) என்பவரும் உயிரிழந்தார். இருவரது சடலங்களும், தொடர்புடையவர்களின் உறவினர்களுக்கு மாற்றி அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், பிணவறைஅனுமதி தொடங்கி சடலத்தை வெளியேற்றும் வரை, பாலமாணிக்கத்தின் மகன் குமாரிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் குமார்கூறும்போது, ‘எனது தந்தை சடலத்தை மாற்றித் தந்தனர். சடலத்தை மயானத்துக்கு அனுப்பஎன்னிடம் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டனர். எனது சூழ்நிலையை விளக்கியதும், ரூ.500 குறைத்து ரூ.5,500 பணம் பெற்றுக் கொண்டனர். இப்படி, என்னை போன்று தினமும் பலர் பாதிக்கப் படுகின்றனர்’ என்றார்.
திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கரோனா தொற்றால் தந்தையை இழந்தவரின் மகன் கூறும்போது, "இறந்ததும் டோக்கன் போடுவது, ஸ்டிரெச்சரில் வைத்து வார்டில் இருந்து பிணவறைக்கு செல்வது, பிணவறைக்குள் அனுமதிப்பது, சடலத்தை எடுத்துக்கொண்டு செல்லும் வாகனம், சடலத்தை வெளியே கொண்டுவருவதற்கு என தனித்தனியாக பணம் கேட்கிறார்கள். இவற்றை கொடுத்தால் மட்டுமே சடலம் உடனடியாக பேக் செய்து தரப்படுகிறது" என்றார்.
மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், ‘இந்து தமிழ் திசை'செய்தியாளரிடம் கூறும்போது,"மேற்கண்டபணிக்கு லஞ்சம் பெறுவது கண்டறியப்பட்டால், தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கைமேற்கொள்ளப்படும்” என்றார்.