ஓசூர் சீதாராம் மேடு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் காத்திருந்த பொதுமக்கள். 
தமிழகம்

தடுப்பூசி ஆர்வம்: ஓசூரில் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டுக்கொண்ட பொதுமக்கள்

ஜோதி ரவிசுகுமார்

ஓசூரில் உள்ள கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களான அரசு பொது மருத்துவமனை உட்பட 12 மையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓசூர் மாநகராட்சியில் அரசு பொது மருத்துவமனை மற்றும் சீதாராம் மேடு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 12 இடங்களிலும் கரோனா தடுப்பூசி மையம் செயல்படுகிறது. இந்த மையங்களில் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக சீதாராம் மேடு தடுப்பூசி செலுத்தும் மையத்தில் காலை 7 மணி முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. பின்பு காலை 9 மணியளவில் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டு தனிமனித இடைவெளியுடன் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்காகப் பொதுமக்கள் தடுப்பூசி மையம் முன்பு காலை 5 மணி முதலே வரிசையில் நின்று டோக்கன் பெற்று, தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இதில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

ஓசூர் சீதாராம் மேடு தடுப்பூசி மையம் உட்பட நகரில் உள்ள 12 மையங்களிலும் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் மேலும் கூடுதலாகத் தடுப்பூசி மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சீதாராம் மேடு ஆரம்ப சுகாதார நிலையப் பொறுப்பாளரும், ஓசூர் வட்டார மருத்துவ அலுவலருமான மருத்துவர் விவேக் கூறும்போது, ''ஓசூர் வட்டத்தில் உள்ள ஒரு அரசு பொது மருத்துவமனையிலும், 11 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

சீதாராம் மேடு தடுப்பூசி மையத்தில் 18 வயது முதல் 44 வயதுடைய, தொழிற்சாலைகளில் பணிக்குச் செல்பவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையத்தில் இன்று மட்டும் 640 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT