தமிழகம்

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுப்பது எப்படி?- பொது சுகாதார வல்லுநர் குழந்தைசாமி விளக்கம்

செய்திப்பிரிவு

கரோனா இரண்டாவது அலையில் நோய்த்தொற்றின் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பாதிக்கப்படாமல் மிகுந்த இருக்க மிகுந்த எச்சரிக்கை தேவை எனப் பொது சுகாதார வல்லுநர் டாக்டர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க செய்யவேண்டியது குறித்து பொது சுகாதார வல்லுநர் டாக்டர் குழந்தைசாமி ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஆலோசனைகள்:

“முதல் அலையின்போது பெரும்பாலும் நடுவயதினர் மற்றும் வயதானவர்களுக்கே கரோனா வைரஸ் தொற்று அதிகமாக ஏற்பட்டது. தற்போது சமுதாயத்தில் மிக அதிக அளவில் கரோனா கிருமி பரவியுள்ளதால், இள வயதினருக்கும், குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தொற்று எப்படி ஏற்படுகிறது?

* கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளுக்கு கர்ப்ப காலப் பரிசோதனைக்குப் போகும்போது, காய்ச்சல், சளி மற்றும் பிற காரணங்களுக்காக வருபவர்களிடமிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு தொற்று ஏற்படுகிறது.

* பல மருத்துவமனைகளில் ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள், ஸ்கேன் பரிசோதனை செய்யும் இடங்கள், மருந்து வழங்கும் இடங்கள் எனப் பல சேவைகள் கரோனா அறிகுறிகளுடன் வருபவர்கள் உட்பட எல்லோருக்கும் பொதுவானதாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* கர்ப்பவதியாகி உள்ள பெண்ணைப் பார்த்துவிட்டு வரலாம், குட்டிப் பாப்பாவைப் பார்த்துவிட்டு வரலாம் என வீட்டுக்கு வருகிற உறவினர்கள் மூலமாகத் தொற்று பரவலாம்.

* வீட்டிலிருந்து வெளியே சென்று திரும்புகிறவர்கள் மூலமாகவும் பரவலாம்.

* பாரம்பரியமாக நடத்துகிற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏராளமான உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்துக் கூட்டம் சேர்ப்பதாலும் தொற்று ஏற்படலாம்.

* மருத்துவமனைக்குக் குழந்தையைப் பார்க்க வரும் உற்றார் உறவினர் மூலமும் தொற்று ஏற்படலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுப்பது எப்படி?

* கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு மருத்துவமனைகளில் கூட்டம் குறைவாக உள்ள போதுதான் செல்ல வேண்டும்.

* கர்ப்பிணிப் பெண்ணின் உடன் உள்ளவர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

* கர்ப்பிணிப் பெண்ணைப் பார்க்க வீட்டிற்கு யாரும் வரக் கூடாது.

* கரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை வளைகாப்பு விழா நடத்தக் கூடாது.

* கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மருத்துவ ஆலோசனையுடன் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போடவேண்டும்.

* பிறந்த குழந்தையைப் பார்க்கவும் யாரும் வரக்கூடாது.

* குழந்தைக்கு தடுப்பூசி போடப்போகும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

* பிரசவத்தின் போது ஒரேயொரு பெண் துணை (Birth Companion) உடன் இருந்தால் போதுமானது. குழந்தையைப் பார்க்க உறவினர்கள் நண்பர்கள் யாரும் மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது.

மருத்துவமனைகளின் பொறுப்பு

* ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தனி இடம், தனி நேரம் ஒதுக்க வேண்டும்.

* மருத்துவமனைகளில் ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள், ஸ்கேன் பரிசோதனை செய்யும் இடங்கள், மருந்து பெறும் இடங்கள் என அனைத்து சேவைகளும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தனியாக வழங்கப்பட வேண்டும்.

* தாய் சேய் நலப் பிரிவு மருத்துவமனையின் மற்ற பிரிவுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

* தடுப்பூசி போட்டுக்கொண்ட, ஆரோக்கியமான, வயது குறைந்த, பெண் துணை ஒருவரை மட்டுமே உடனிருக்க அனுமதிக்க வேண்டும்.

* பார்வையாளர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்கக் கூடாது.

* கர்ப்பிணியாக மற்றும் பாலூட்டும் தாய்மார்களாக உள்ள பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களை நேரடி மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.

கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி வாயிலாக ஆலோசனை போன்ற பணிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

* சளி, தும்மல், இருமல், காய்ச்சல், தொண்டை வலி, கடுமையான தலைவலி, உடல்வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

* சளி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

* நடமாடும் மருத்துவமனை மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

* கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறப்புக் கவனம் வழங்கப்பட வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

* உங்கள் ஊருக்கான ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர், கிராம சுகாதார செவிலியர்களின் கைபேசி எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உதவி எண்கள்

102, 104, 108 மற்றும் மாவட்ட மாநில உதவி எண்களைக் (044-29510400; 044-29510500;
94443 40496 & 87544 48477) குறித்து வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் அவசர உதவிக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள பொதுவான வழிகாட்டுதல்கள்

* முகக்கவசம் அணிதல்

* கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல்

* சக மனிதர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தள்ளி இருப்பது.

* கூட்டம் கூடும் இடங்களுக்கு/ நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது.

* கைகள் அடிக்கடி படக்கூடிய இடங்களைக் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்

* கதவு, ஜன்னல்களை நன்கு திறந்து காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுதல்

* இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல்

தற்போதுள்ள அபாயகரமான சூழ்நிலையை மனதில் கொண்டு, தயவுசெய்து கர்ப்பிணிப் பெண்களையும் பாலூட்டும் தாய்மார்களையும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் பார்த்துக் கொள்ளுங்கள்”.

இவ்வாறு பொது சுகாதார வல்லுநர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT