தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில் தடுப்பூசி இல்லை: அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதியில் நிறுத்தப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் தடுப்பூசி இல்லாததால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,900-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதையடுத்து கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் பலரும் ஆர்வமாக உள்ளனர். மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 54 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் மாவட்டத்தில் தடுப்பூசி இல்லாததால் அனைத்து மையங்களிலும் பாதியிலேயே தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இனி அங்கும் 2-வது தவணை செலுத்துவோருக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பூசி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்துச் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மாநிலம் முழுவதுமே தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. தடுப்பூசி மையங்களில் இருப்பு இருந்தது வரை செலுத்திவிட்டனர். ஒருசில நாட்களில் தடுப்பூசி வந்துவிடும்,’ என்று கூறினர்.

SCROLL FOR NEXT