காரைக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை. 
தமிழகம்

காரைக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதன பெட்டிகள் பழுது: பிரேதங்களை பாதுகாப்பதில் சிக்கல்

இ.ஜெகநாதன்

காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதனப் பெட்டிகள் இயங்காததால் பிரேதங்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் இறந்தவர் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் வராவிட்டாலோ, விபத்து, தற்கொலை உள்ளிட்டவற்றால் இறந்தோரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டாலோ உடல்களைப் பாதுகாப்பாக வைக்க பிணவறையில் 8 குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளன.

இதில் 4 குளிர்சாதனப் பெட்டிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மீதியிருந்த நான்கு குளிர்சாதனப் பெட்டிகளும் பழுதடைந்தன. இதனால் இறந்தோரின் உறவினர்களை தனியாரிடம் வாடகைக்கு குளிர்சாதனப் பெட்டி வாங்கித் தர மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்துகிறது. அதே நேரம் அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை பாதுகாக்க முடியாததால், அவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மீனாள் கூறுகையில், குளிர்சாதனப் பெட்டியை தனியாரிடம் வாடகைக்கு எடுத்தால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை தர வேண்டியுள்ளது. இதனால் ஏழை எளியோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனை வளாகத்துக்கு வந்து பழுதை சரிசெய்ய எலக்ட்ரீஷியன்கள் மறுக்கின்றனர். விரைவில் குளிர்சாதனப் பெட்டிகள் பழுது நீக்கப்படும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT