கோவை மசக்காளிபாளையம் அம்மா உணவகத்தில் இலவச மதிய உணவு வழங்கும் பணியை இன்று தொடங்கிவைத்த அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி ஆகியோர். | படம்:ஜெ.மனோகரன். 
தமிழகம்

கோவை அம்மா உணவகங்களில் திமுக சார்பில் இலவச உணவு: நீலகிரி, திருப்பூர், ஈரோட்டிலும் வழங்க நடவடிக்கை

க.சக்திவேல்

கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு வழங்கும் பணியை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் இன்று (மே 28) தொடங்கி வைத்தனர்.

கோவை மசக்காளிபாளையம் அம்மா உணவகத்தில் திமுக சார்பில் இலவச உணவு வழங்கும் பணியை அமைச்சர்கள் தொடங்கிவைத்த பிறகு, சாலையோரங்களில் வசிப்போர், பொதுமக்களுக்கு என அனைவருக்கும் அங்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது, அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கின்போது சாலைகளில் வசிப்போர், பொதுமக்களுக்கான உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 12 அம்மா உணவகங்கள், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள 3 அம்மா உணவகங்களிலும் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் கரோனா தொற்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் கூடுதலாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலரும் மாவட்டத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கரோனா தொற்றில் இருந்து நம்மைக் தாக்கும் கேடயமாகத் திகழும் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்'' என்று அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி ஆகியோர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT