புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று 2-வது அலை கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. புதுவையிலும் கரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாள்தோறும் 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சராசரியாக நாள்தோறும் 30 பேர் மரணமடைந்தனர். புதுவையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் மதியம் 12 மணி வரை அத்தியாவசியக் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.
கரோனா ஊரடங்கால் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்திருந்தன.
முதல்வர் ரங்கசாமி கரோனா சிகிச்சை பெறச் சென்றால் எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு ஒரு கோப்புடன் சென்றார். அந்தக் கோப்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கோப்புக்கு ஆளுநர் தமிழிசை உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "கரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 வழங்கப்படும். இதனால் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இது விரைவில் வழங்கப்படும்.
கரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அச்சம் தேவையில்லை. முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். தடுப்பூசி தேவையான அளவு கையிருப்பில் உள்ளது" என்று குறிப்பிட்டார்.