மதுரை ரயில்வே கோட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பத்திற்கு தனித்தனியே ஆறுதல் கடிதங்களை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா முதல் மற்றும் 2வது அலையால் மதுரை ரயில்வே கோட்டத்தில் தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என, பலர் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் முதல் அலையில் தொற்று பாதித்து மேத்யூ, பிரபாகர், மூர்த்தி, ஸ்ரீனிவாசன் ஆகியோரும், 2வது அலையில் ஜெகதீசன், சோமு, பேபிரமணி, செல்வராஜ், சுரேஷ்பாபு, சிவராஜ், முத்துக்கருப்பணன் ஆகியோரும் என, 11 பேர் உயிரிழந்தனர்.
இவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனித்தனியே கடிதம் அனுப்பி உள்ளார்.
ஒவ்வொரு கடித்திலும் அமைச்சர் கூறியிருப்பதாவது:
இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த நிர்வாகம், ஊழியர்களின் சார்பில் எனது அனுதாபங்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்கிறேன். கடந்தாண்டு முதலே உலகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத எதிரி கரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடுகிறோம்.
இப்போராட்டத்தில், ரயில்வே தன்னலமின்றி தேசத்தின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
இந்நேரத்தில்அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கும் நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைதி, மன உறுதி இருக்கவேண்டும் என, விரும்புகிறேன்.
இந்த கடின நேரத்தில் என் பிரார்த்தனையும் உங்களுடன் இருக்கும். ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை உங்களுக்கு வழங்கட்டும்.
இவ்வாறு கடிதங்களில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.