திருப்பத்தூரில் நரிக்குறவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி. 
தமிழகம்

இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலி: முதல்வர் உத்தரவில் நரிக்குறவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கரோனா ஊரடங்கால் தவித்த நரிக்குறவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நிவாரணப் பொருட்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து, குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் வாங்க கூட பணம் இன்றி தவிப்பதாக திருப்பத்தூர் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து இந்து தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியானது.

இத்தகவலை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று 120 நரிக்குறவர் குடும்பங்களுக்கு அமைச்சர், ஆட்சியர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

இதில் 15 நாட்களுக்குத் தேவையான 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சர்க்கரை, சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் தொகுப்பு, பால் பாக்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இருந்தன.

கோட்டாட்சியர் சுரேந்திரன், வட்டாட்சியர் ஜெயந்தி, ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம், ஜஹாங்கீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT