மதுரை சமயநல்லூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 9 சிறுமிகள் உட்பட 11 பெண்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்தக் காப்பகம் மூடப்பட்டது.
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் உள்ள சபரி நகர்ப் பகுதியில் ஆதரவற்றோர்களுக்காக "சாந்தி இல்லம்" என்கிற தனியார் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.
இங்கு 6 வயதிற்குட்பட்ட 27 சிறுமிகள் மற்றும் 8 பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.
காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகள் அந்த காப்பகத்தில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வந்தனர். பள்ளிகள் கரோனா தொற்று விடுமுறை என்பதால் காப்பகத்திலேயே தங்கிருந்தனர்,
இந்த நிலையில் அங்கு தங்கியிருந்த பணியாளர் ஒருவருக்கு காய்ச்சல் இருமல் இருந்ததால் அவரை பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று உறுதியானது.
இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் தங்கியிருந்து 27 குழந்தைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்தபோது 9 குழந்தைகள் மற்றும் இரு பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.
தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காப்பகத்தில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனினும் காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டது.