மாதிரிப் படம் 
தமிழகம்

குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லை: கண்ணீருடன் நரிக்குறவர்கள் முதல்வருக்கு கோரிக்கை

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் தங்களது குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லையெனவும், தங்களுக்கு உதவ வேண்டுமெனவும் தமிழக முதல்வருக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் கல்வெட்டுமேடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் கரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நரிக்குறவர்கள் ஒன்றாக இணைந்து தங்களது குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் வாங்க கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாக கண்ணீர் மல்க, சமூகவலைதங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் நரிக்குறவர்கள் கூறியதாவது, “ நாங்கள் பறவைகளை வேட்டையாடியும், திருவிழாக்கள், பேருந்துநிலையங்களில் ஊசி, பாசி, சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை விற்பனை செய்தும் பிழைப்பு நடத்தி வந்தோம்.

கடந்த ஆண்டு தொடர்ந்து பல மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் இந்தாண்டும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஓராண்டிற்கு மேலாக தொழில் செய்ய முடியவில்லை.

ஏற்கனவே வனத்துறை கெடுபிடியால் பறவைகளை வேட்டையாடுவதை நிறுத்திவிட்டோம்.

தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளதால் எங்களது குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் கூட வாங்க முடியாமல் தவிக்கிறோம். தமிழக முதல்வர் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று கூறினர்.

SCROLL FOR NEXT