கோவையில் கருப்பு பூஞ்சை தொற்றால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையின் தாக்கம் கோவையில் அதிகமாக உள்ளது.
முதல் அலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கருப்பு பூஞ்சை தொற்றால் பெரிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இரண்டாம் அலையில் ஏற்பட்டு வரும் கரோனா தொற்றால் நுரையீரலில் அதிக பாதிப்பு ஏற்படுவதால் தீவிர கிசிச்சை பிரிவு, ஆக்சிஜன் படுக்கைகளில் நீண்ட நாட்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கரோனாவின் கூடுதல் வீரியம், அதற்கேற்ப சிகிச்சையின்போது அளிக்கப்படும் மருந்துகள் என இரண்டும் இணைந்து நோய் எதிர்ப்பு திறனை குறைப்பதால் கடந்த சில நாட்களாக கோவையில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உறுதியாகிவருகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறும்போது, "கோவை மாவட்டத்தில் 3 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 21 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் தொற்றுகிறது.
எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், தேவைப்படுவோருக்கு மட்டுமே ஸ்டீராய்டு மருந்துகளை அளிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள், நோய் எதிர்ப்பு திறனில் மாறுதல் ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை பயன்படுத்தக்கூடாது எனவும், யாருக்கேனும் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதியானால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். " என்றனர்.