தமிழகம்

ஊரடங்கைப் பயன்படுத்தி காய்கறிகளை அதிக விலைக்கு விற்பது சுரண்டல்; கடுமையான நடவடிக்கை பாயும்: உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி

செய்திப்பிரிவு

ஊரடங்கைப் பயன்படுத்தி, காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் அத்தியாவசியப் பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நாளை (24-5-2021) முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

மக்களின் உயிர்காக்கும் பொருட்டும் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க இயலாத இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்று ஒத்துழைப்பு தரும் இவ்வேளையில், சில வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையினை பயன்படுத்தி காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

இது மக்களை சுரண்டும் ஒருசெயல்.இவ்வாறாக உயர்த்தப்பட்ட விலையினை உடனடியாக வழக்கமான விலைக்கு குறைக்க வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

அவ்வாறு நடவடிக்கை ஏற்படும் சூழ்நிலை நிகழாத வண்ணம் வணிகர்களும் தனியார் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT