தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கைக் கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், மக்கள் தேவையின்றி வெளியே வருவதாலும், காய்கறி, மீன், இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியின்றிக் கூடுவதாலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,06,861 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 5,559 பேர் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,73,671 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, தளர்வுகளற்ற முழுக் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை இன்று அரசு அறிவித்தது. தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையொட்டிப் பொதுமக்களின் வசதிக்காக இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் வழக்கம்போல் திறந்து இருக்கும். வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள், தொழிலாளர்கள் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் முழு ஊரடங்கைக் கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''9-5-2021 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, கீழ்க்காணும் அமைச்சர்களைத் தொடர்புடைய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் நியமித்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
1. சென்னை மாவட்டம்
மா. சுப்பிரமணியன்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
பி.கே. சேகர்பாபு,
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
2. செங்கல்பட்டு மாவட்டம்
தா.மோ. அன்பரசன்
ஊரகத் தொழில் துறை அமைச்சர்.
3. கோயம்புத்தூர் மாவட்டம்
அர. சக்கரபாணி,
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
கா. ராமச்சந்திரன்,
வனத் துறை அமைச்சர்.
4. திருவள்ளூர் மாவட்டம்
சா.மு. நாசர்,
பால்வளத் துறை அமைச்சர்
5. மதுரை மாவட்டம்
பி. மூர்த்தி,
வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.
பழனிவேல் தியாகராஜன்,
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
6. தூத்துக்குடி மாவட்டம்
கீதா ஜீவன்,
சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,
மீன்வளம்-மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
7. சேலம் மாவட்டம்
வி. செந்தில்பாலாஜி,
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
8. திருச்சி மாவட்டம்
கே.என். நேரு,
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
9. திருநெல்வேலி மாவட்டம்
தங்கம் தென்னரசு,
தொழில் துறை அமைச்சர்
10. ஈரோடு மாவட்டம்
சு. முத்துசாமி,
வீட்டு வசதித் துறை அமைச்சர்.
11. காஞ்சிபுரம் மாவட்டம்
எ.வ.வேலு,
பொதுப் பணித் துறை அமைச்சர்
12. திருப்பூர் மாவட்டம்
மு.பெ. சாமிநாதன்,
செய்தித் துறை அமைச்சர்
13. வேலூர் மாவட்டம்
துரைமுருகன்,
நீர்வளத் துறை அமைச்சர்.
14. விழுப்புரம் மாவட்டம்
க. பொன்முடி,
உயர் கல்வித் துறை அமைச்சர்.
செஞ்சி கே.எஸ். மஸ்தான்,
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்.
15. கடலூர் மாவட்டம்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,
வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர்
சி.வி. கணேசன்,
தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
16. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்
சிவ.வீ. மெய்யநாதன்,
சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
17. கிருஷ்ணகிரி மாவட்டம்
ஆர். காந்தி,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
18. தஞ்சாவூர் மாவட்டம்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
19. தேனி மாவட்டம்
இ. பெரியசாமி,
கூட்டுறவுத் துறை அமைச்சர்.
20. கன்னியாகுமரி மாவட்டம்
த. மனோ தங்கராஜ்,
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.