தமிழகம்

முழு ஊரடங்கு; மதுரை கடை வீதிகளில் பொருட்களை வாங்கக் குவிந்த மக்கள்: சிறப்புப் பேருந்துகளும் இயக்கம்

என்.சன்னாசி

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பால் மதுரையில் முக்கிய வீதிகளில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். வெளியூர் செல்லும் மக்களின் நலன் கருதி சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், மக்கள் தேவையின்றி வெளியே வருவதாலும், காய்கறி, மீன், இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியின்றிக் கூடுவதாலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, தளர்வுகளற்ற முழுக் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை இன்று அரசு அறிவித்துள்ளது. மே 24 முதல் இந்த முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதையொட்டிப் பொதுமக்களின் வசதிக்காக இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் வழக்கம்போல் திறந்து இருக்கும். வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள், தொழிலாளர்கள் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.

ஊரடங்கு அறிவிப்பால் மதுரையில் மளிகை உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு முக்கிய பஜார்களில் மக்கள் திரண்டனர். மதுரை கீழமாசி வீதியில் குவிந்த மக்கள் சமூக இடைவெளியின்றிப் பொருட்களை வாங்கினர். போலீஸாரும் மைக் மூலம் எச்சரித்தனர்.

இதேபோன்று மீன், இறைச்சிக் கடைகளிலும் பொதுமக்கள் திரண்டனர். முன்கூட்டியே வாங்கி வைக்கும் நோக்கில் கூட்டம் அலைமோதியது. விழாக்களை முன்னிட்டுப் பொருட்கள் வாங்கும் கடைகளிலும் மக்கள் காணப்பட்டனர். முழு ஊரங்கு அறிவிப்பால் ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் மக்கள் உடைமைகளுடன் புறப்பட்டுச் சென்றனர்.

SCROLL FOR NEXT