தமிழகம்

முழு ஊரடங்கு அச்சம்: திருச்சி காய்கனி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

ஜெ.ஞானசேகர்

தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக, காய்கனிகளை வாங்க, திருச்சி மேல புலிவார்டு சாலையில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் இன்று பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்.20-ம் தேதி முதல் ஏப்.30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர பொது ஊரடங்கை அரசு அமல்படுத்தப்படுத்தியது. தொடர்ந்து, மே 10-ம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், காய்கனி- மளிகை - பால் - மருந்துக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை செயல்பட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முழுமையான ஊரடங்கு அல்லாமல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாகவே கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று திருச்சிக்கு வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு தரப்பினரும் தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகு உரிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மாநிலத்தில் ஏற்கெனவே ஞாயிறுதோறும் முழு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிடுமோ என்று மக்கள் கருதினர். இதன் காரணமாகத் திருச்சி, மேல புலிவார்டு சாலையில் உள்ள தற்காலிகக் காய்கனி மார்க்கெட்டில் காய்கனிகள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிந்திருந்தாலும், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இதேபோல், பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதையடுத்து மாநகராட்சி ஊழியர்களும், போலீஸாரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தினர். அதேநேரத்தில் மாநகர் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை நடத்தி, தேவையின்றி வெளியே வந்ததாகக் கண்டறிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தத்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT