தமிழகம்

தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க தாரேஸ் அகமது தலைமையில் குழு அமைப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் அளவை மத்திய அரசு அண்மையில் அதிகரித்துள்ளது.

அதேசமயம், தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பு பணிக் குழுக்களை அமைத்து ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகத்துக்கான சிறப்பு பணிக் குழு, தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரே ஆக்சிஜன் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் மத்திய அரசு சார்பில், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலர் ஹுகும் சிங் மீனாவும், பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு நிறுவன அதிகாரி சஞ்சனா சர்மாவும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் பிரிவு தலைவர் இக்குழுவின் உறுப்பினர் செயலராகவும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மயக்கவியல் பிரிவு தலைவர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT