தஞ்சாவூரில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த கனமழையால், 50 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால்,விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய கோடை மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருவையாறு, நடுக்கடை, திருக்காட்டுப்பள்ளி, குலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இதுகுறித்து குலமங்கலத்தைச் சேர்ந்த வாழை விவசாயி பிரபு கூறும்போது, ‘‘கரோனா தடை உத்தரவால், சென்ற ஆண்டு வாழை விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போதும் கரோனா ஊரடங்கால் வாழை விற்பனை பெரியளவில் இல்லை. ஊரடங்கு முடிந்த பிறகு, விற்பனை செய்யலாம் என்று இருந்த நிலையில், காற்றுடன் பெய்த மழையால் அனைத்து மரங்களும் முற்றிலும் முறிந்து விழுந்துவிட்டன. இதனால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், விழுந்த மரங்களை அப்புறப்படுத்த கூடுதலாக 20 ஆயிரம் வரை செலவு ஏற்படும்.
எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு வழங்குவது போல, வாழைக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில், இப்பகுதியில் காற்று, மழை காரணமாக முறிந்து சேதமான வாழை மரங்களை நேற்று வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பார்வையிட்டு, சேதத்தை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.