தமிழகம்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்கள் விற்பனைக்கு மட்டும் விதி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பல்வேறு தரப்பினர் வாழ்வாதாரங்களை இழந்து வருகின்றனர்.

இதனால் கரோனா பணியில் ஈடுபடும் காவல்துறையினர், உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும், ஊடகத்துறையினர், தியேட்டர் உரிமையாளர்கள், உடற்பயிற்சி கூட பணியாளர்கள், சலூன், அழகு நிலையம் நடத்துவோர், தனியார் பேருந்துகளின் ஓட்டுனர், நடத்துனர்கள், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள், அமைப்பு மற்றும் அமைப்பசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT