திண்டுக்கல்லில் பயன்பாட்டுக்கு வந்த வேடபட்டி எரிவாயு தகனமேடை. 
தமிழகம்

திண்டுக்கல்லில் உயிரிழப்புகள் அதிகரிப்பால் கூடுதலாக பயன்பாட்டுக்கு வந்த எரிவாயு தகன மேடை

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் கூடுதலாக ஒரு மயானம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. இந்த மாதத் தொடக்கம் முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தது.

அதிகபட்சம் மே 15-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 458 ஆக அதிகரித்தது. பழநி பகுதியில், ஒரே நாளில் அதிகபட்சமாக 148 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை தினமும் பத்துக்கும் குறைவாக இருந்தபோதும், பிற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என இறப்பு விகிதம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மின்மயானத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு நாளைக்கு 20 மணி நேரத்துக்கு மேலாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக, தினமும் அதிகபட்சம் திண்டுக்கல் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 5 உடல்களே எரியூட்ட வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 20-க்கும் மேற்பட்ட உடல்கள் மின்மயானத்துக்கு எரியூட்ட கொண்டு வரப்படுகின்றன. இங்கு எரியூட்ட தாமதமாவதால் அருகிலுள்ள எரியோடு மயானத்துக்கும் சில உடல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நேற்று முன்தினம் திண்டுக்கல் மின்மயானத்துக்கு 25-க்கும் மேற்பட்ட உடல்கள் கொண்டு வரப்பட்டதால் மயான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் ஓய்வே இல்லாமல் பணிபுரியும் நிலை ஏற்பட்டது.

மேலும் மின் மயானத்தில் பராமரிப்பு பணி கூட மேற்கொள்ள நேரமில்லாத நிலை நிலவுகிறது. இதனால் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் வேடபட்டியில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் மயானத்தை நேற்று முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மயானம் போதிய உடல்கள் எரியூட்ட வராததால், முழுமையாகப் பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில் பயன்பாட்டுக்கு வந்த முதல் நாளே 10 உடல்கள் கொண்டு வரப்பட்டன. இந்த மயானத்தில் எல்.பி.ஜி. காஸ் பயன்படுத்தி உடல்கள் எரியூட்டப்படுகின்றன.

இதன் மூலம் இறந்தவர்களின் உறவினர்கள், அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT