புதுக்கோட்டையில் ஏற்கெனவே தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயும் மின்சாரம் பாய்ந்து அண்மையில் உயிரிழந்ததால் ஆதரவின்றித் தவிக்கும் 2 மகள், மகனுக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என, சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை காமராஜபுரம் 34-ம் வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி நாகஜோதி (41). கூலித் தொழிலாளர்களான இவர்கள் குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலை செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ராஜேந்திரன் இறந்துவிட்டார். கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்த நாகஜோதி மீது, கடந்த 8-ம் தேதி காமராஜபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்தது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பின்னர், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நாகஜோதி 17-ம் தேதி உயிரிழந்தார்.
கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த தாயும் இறந்துவிட்டதால், ஆதரவற்ற நிலையில் 2 மகள்கள், 1 மகன் ஆகியோர் உள்ளனர். மின்சார வாரியத்தின் அலட்சியத்தினால் உயிரிழந்த நாகஜோதியின் பிள்ளைகளுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என, சிஐடியு தொழிற்சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அத்தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எ.ஸ்ரீதர் கூறும்போது, "மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளதால் மின்வாரியத்தின் மூலமாக ரூ.10 லட்சமும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்தும் நிதியுதவி செய்ய வேண்டும்.
இறந்த நாகஜோதி கட்டிடத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதால், அவரது இறப்புக்கான இழப்பீட்டுத் தொகையை நலவாரியத் துறை உடனே வழங்க வேண்டும்.
தொடர்ந்து, பிள்ளைகள் மூவருக்குமான உயர்கல்விச் செலவை அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பதோடு, முதுநிலை பட்டதாரியாக உள்ள மூத்த மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.