தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 1,759 பேருக்குத் தொற்று: மேலும் 29 பேர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், புதிதாக 1,759 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (மே 19) வெளியிட்டுள்ள தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,007 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,365, காரைக்காலில் 218, ஏனாமில் 120, மாஹேவில் 56 என மொத்தம் 1,759 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 23 பேர், காரைக்காலில் 5 பேர், மாஹேவில் ஒருவர் என 29 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள் ஆவர்.

இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,241 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.39 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை மொத்தமாக 89 ஆயிரத்து 508 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,090 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 15,562 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 17 ஆயிரத்து 652 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 1,555 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 615 (78.89 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 147 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 526 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 304 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT