கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, கரோனா காலப் பாதுகாப்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாகப் பாடுபடுபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், போலீஸார் ஆகியோர் அடங்குவர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரில் கரோனா தொற்று ஏற்பட்டு பலியாவோர் எண்ணிக்கை அதிகம். உதவி ஆணையர் தொடங்கி கடைக்கோடி காவலர் வரை உயிரிழப்புகள் அதிகம்.
கரோனா நோயிலிருந்து மக்களைக் காக்க அந்நோய் மக்களிடம் பரவாமல் தடுக்க, முழு ஊரடங்கு, பாதிப்படைந்த பகுதிகளைத் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தங்களின் குடும்பம், உயிர் உள்ளிட்டவற்றைப் பெரிதாகப் பாராமல் இரவு பகலாக பணியாற்றி வந்த காவலர்கள் உயிரிழந்ததால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்களப் பணியாளர்களில் நூற்றுக்கணக்கான காவலர்கள் உயிரிழந்தும் அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி கிடைக்கவில்லை என்பது காவலர்களின் ஆதங்கமாக உள்ளது.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
''கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கரோனா கால பாதுகாப்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை நடைமுறைப்படுத்துபவர்கள் காவலர்கள்தான். தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் மக்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்வதால் அவர்கள் கரோனா தொற்றுக்கு எளிதில் ஆளாகின்றனர்.
தமிழ்நாட்டில் 54 காவலர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் உயிர்நீத்த அவர்களின் தியாகம் இணையற்றது. அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படவேண்டும். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்”.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.