தமிழகம்

துணை முதல்வர் பதவி - சம்மதிக்காத ரங்கசாமி: பதவி ஏற்க இயலாமல் காத்திருக்கும் எம்எல்ஏக்கள்

செ. ஞானபிரகாஷ்

துணை முதல்வர் பதவி உருவாக்கத்துக்கு முதல்வர் ரங்கசாமி சம்மதிக்காததால், எம்எல்ஏக்கள் பதவியேற்க தற்காலிக சபாநாயகர் நியமனத்துக்கும் அனுமதி தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி மட்டும் பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 9ஆம் தேதி தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார்.

சீனியர் எம்எல்ஏவான லட்சுமிநாராயணன் தற்காலிக சபாநாயகராகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இதற்கான நியமன உத்தரவு இதுவரை வெளியாகவில்லை.

அதே 9ஆம் தேதியன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்ற ரங்கசாமி குணமடைந்து புதுச்சேரிக்கு நேற்று திரும்பினார்.

தற்காலிக சபாநாயகர் நியமனத்துக்குப் பரிந்துரை செய்து 10 நாட்கள் ஆகிய நிலையில், இதுவரை ஆளுநர் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதுபற்றி எம்எல்ஏக்கள் தரப்பில் விசாரித்தபோது, "வழக்கமாக தற்காலிக சபாநாயகருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகர் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். வாக்கு எண்ணிக்கை முடிந்து 15 நாட்களைக் கடந்தும் எம்எல்ஏக்கள் பதவியேற்க முடியவில்லை" என்று வேதனையுடன் குறிப்பிட்டனர்.

இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "பாஜக தரப்பில் துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள், சபாநாயகர் பதவிகளைக் கேட்டு வருகின்றனர். இதற்கு ரங்கசாமி சம்மதிக்கவில்லை. முக்கியமாக துணை முதல்வர் பதவி உருவாக்கத்தை ஏற்கவில்லை. அத்துடன் பாஜகவுக்கு 2 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகளைத் தர முன்வந்துள்ளார். இதனால் அமைச்சரவையை உருவாக்குதில் இழுபறி நிலவுகிறது. இந்த மோதல் காரணமாக தற்காலிக சபாநாயகர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது" என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT