தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும்: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும், வெப்பச் சலனம் காரணமாக 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த உச்ச உயர் தீவிர புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலுக்குச் சென்று நேற்று இரவு 120 கிலோ மீட்டர் வடகிழக்கு திசையில் சௌராஷ்ட்ரா கரையைக் கடந்தது. தற்போது அப்பகுதியில் வலுவிழந்து தீவிர புயலாக நிலைகொண்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக மே 18 இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே.19 நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடலூர் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 20 மே 21 இரண்டு நாட்கள் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மே 22 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு:

விராலிமலை (புதுக்கோட்டை) 4 செ.மீ., பொன்மலை (திருச்சி), கொடைக்கானல், திருச்சி விமான நிலையம், உதகமண்டலம், பந்தலூர் (நீலகிரி) தலா 3 செ.மீ., உசிலம்பட்டி (மதுரை), மருங்காபுரி (திருச்சி) தளி (கிருஷ்ணகிரி) தலா 2 செ.மீ., புதுக்கோட்டை, மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மே 22 அன்று தமிழக கடலோரப் பகுதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அறிவிப்பு

தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை மே 19 இரவு 11.30 மணி வரை கடல் அலை ஒன்றரை மீட்டர் முதல் இரண்டரை மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். மீனவர்கள் இப்பகுதியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT