தமிழகம்

நீதிமன்ற நடுவர் மரணம் எதிரொலி: கீழமை நீதிமன்ற பணிகளை தற்காலிகமாக நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

நெல்லை நீதிமன்ற நடுவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது. நீதிபதிகள் சங்க கோரிக்கையை பரிசீலனையில் உள்ள நிலையில் நீதித்துறை நடுவர் மரணம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நிறுத்திவைக்க வேண்டும்.

கைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர்த்து மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களிலும் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வர தடைவிதிக்கப்படுகிறது.

நீதிபதிகளின் முன் அனுமதியைப் பெற்ற பிறகே நீதிமன்றத்திற்கு வர வேண்டும். தேவையின்றி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்றக் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT