தமிழகம்

குற்றச்செயலில் தொடர்பு இருந்தால் வழக்கில் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

குற்றச் செயலில் தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் இருந்தால், குற்ற வழக்கின் விசாரணை எந்த நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்க விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தண்டையார்பேட்டையில் வரதட்சணைக் கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் கணவரின் உறவினர்களான பூங்கனி, குரு பாண்டியன் மற்றும் தாமரைச் செல்வி ஆகியோரைக் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கக் கோரி, பெண்ணின் தாய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றம், மூன்று பேரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்த்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பூங்கனி உள்ளிட்ட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஒரு குற்றச் செயலில் தொடர்புள்ளது என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால், ஒரு வழக்கின் விசாரணை எந்த நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்க குற்ற விசாரணை முறைச் சட்டம் 319-வது பிரிவின் கீழ் கீழமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கூறி, சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

புதிதாகச் சேர்க்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சேர்த்து இந்த வழக்கை விசாரிக்கும்படி மகளிர் நீதிமன்றத்திற்கும் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT