கரோனா இரண்டாவது அலை நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு தமிழகத்துக்கு பல்வேறு உதவிகளைக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் விவரம் பின்வருமாறு:
கரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், அன்றாடம் 32,000 பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் அன்றாடம் தொற்றாளர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிப்பதால் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கை வசதிகளின் தேவை ஆகியன அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் சேர நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
இத்தகைய சூழலில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக விநியோகிக்க வேண்டும், தமிழகத்துக்கான தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.