லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால் 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இன்று அது மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக லட்சத்தீவுப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப் பெறக்கூடும்.
இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் சூறைக் காற்றுடன் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (மே.15) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 - 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 - 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்''.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.